திங்கள், 17 நவம்பர், 2014

ஏக திசை சந்திப்பும் திருமண வாழ்க்கையில் வரும் இன்னல்களும் !



  திருமண பொருத்தம் பார்ப்பதில் தற்பொழுது மிக பிரபலம் ஆகிக்கொண்டு இருக்கும் ஒரு வார்த்தை " ஏக திசை சந்திப்பு " அதாவது திருமண பொருத்தம் காண வரும் வது வரன் இருவரின் ஜாதகத்தை ஆய்வு செய்யும் ஜோதிடர்கள், வது வரனின் ஜாதகத்தில் நட்சத்திர பொருத்தம் 10 க்கு எத்தனை இருக்கின்றது என்பதை உறுதி செய்துகொண்டு, இருவருக்கு தற்பொழுது நடைபெறும் திசை ஒரே கிரகத்தின் திசையாக இருப்பின், இந்த ஜாதகங்கள் பொருந்தாது என்று கூறி தவிர்க்க சொல்கின்றனர், இதை கேட்ட உடன் ஜாதகம் காண வந்தவர்களும் பொருத்தம் இல்லை என்று நினைத்து, திருமண பேச்சை அத்துடன் விட்டு விடுகின்றனர், இதன் உண்மை நிலையை இன்றைய பதிவில் ஆய்வுக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !


கிழ்கண்ட ஜாதகங்கள் இதற்க்கு முன் 3 ஜோதிடர்கள் ஆய்வு செய்து இருவருக்கும் ஒரே திசை நடைபெறுவதால் ( சுக்கிரன் திசை ) பொருத்தம் வராது என்று, வரனின் ஜாதகத்தில் 5ல் ராகு  இருப்பதால் புத்திர பாக்கியம் இருக்காது என்று காரணம் சொல்லி ஜாதகம் காண வந்தவர்களின் வயிற்றில் புளியைகரைத்து அனுப்பி விட்டனர், உண்மையில் இரு தரப்பினருக்கும் ஜாதக பொருத்தம் பார்க்கும் முன்பு வரை மிகுந்த எதிர்பார்ப்புடன் இருந்துள்ளனர் வதுவுக்கும் வரணுக்கும் பிடித்து விட்டதால் திருமணத்தை நடத்திவிடலாம் என்று, ஜாதகம் பார்க்க போன இரு தரப்பினருக்கும் இந்த பதிலால் கிலியடித்து, திருமணத்தையே நிறுத்தி விடலாம் என்ற முடிவுக்கு வந்துவிட்டனர், இவர்களை எமது நண்பர் விபரம் சொல்லி நம்மிடம் அழைத்து வந்தார், வது வரனின் ஜாதகத்தை தெளிவாக ஆய்வு செய்து இரு தரப்பினருக்கும் விளக்கத்தை எடுத்து உரைத்து, ஜாதகத்தில் உள்ள உண்மை நிலையை தெளிவு படுத்தி திருமணம் நடத்தி வைத்தோம் அன்பர்களே !

ஜாதக ஆய்வு 

வரனின் ஜாதக நிலை :



வதுவின் ஜாதக நிலை :



மேற்கண்ட இரண்டு ஜாதகத்திலும் சுக்கிர திசை நடைமுறையில் இருக்கிறது, ஜோதிடர்கள் காரணமாக கூறியது இருவருக்கு ஒரே திசை நடைபெறுகிறது எனவே திருமணம் செய்ய கூடாது என்பது, இதற்க்கு ஜோதிடதீபம் கிழ்கண்ட வாறு  விளக்கம் தந்தது.

வரனின் ஜாதகத்தில் நடைபெறும் சுக்கிரன் திசை ( 30/03/2013 முதல் 30/03/2033 வரை )

 ஜாதகனுக்கு சுக்கிர திசை களத்திர ஸ்தானமான 7ம் வீடு , சுக ஸ்தானமான 4ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோகத்தை தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகருக்கு 7ம் வீடு தொடர்பு பெரும் நான்காம் பாவகம், கால புருஷ தத்துவ அமைப்பிற்கு முதல் வீடாக அமைந்து சர நெருப்பு தத்துவ அமைப்பில் செயல்படுவதால், ஜாதகர் சுய கட்டுப்பாடு, தன்னம்பிக்கை, ஒழுக்கம், நேர்மையான குணம், செய்யும் தொழில் தனது செயல்பாடுகள் மூலம் வெற்றி பெற்று சுய உழைப்பின் மூலம் வண்டி வாகனம், சொத்து சுக சேர்க்கை, நினைத்ததை சாதிக்கும் வல்லமை, நல்ல உடல் நிலை மற்றும் மன நிலையை பெரும் யோகம், மற்றவர் போற்றும் அருங்குணங்கள், சமுதாய அந்தஸ்து மற்றும் ஏற்றமிகு பெருவாழ்வை குறுகிய காலத்தில் ( சரம் ) பெரும் யோகத்தை தரும்.

வதுவின் ஜாதகத்தில் நடைபெறும் சுக்கிரன் திசை ( 16/12/2002 முதல் 16/12/2022 வரை )

 ஜாதகிக்கு சுக்கிரன் திசை 1,7ம் வீடுகள் களத்திர ஸ்தானமான 7ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று மிகுந்த யோகத்தையே தந்துகொண்டு இருக்கிறது, ஜாதகிக்கு 7ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 10ம் வீடாக அமைந்து சர மண் தத்துவ அமைப்பில் நடைபெறுவதால், ஜாதகி பொறுமையான குணமும், சிறந்த உடல் நலமும், மற்றவர் போற்றும் பெருந்தன்மையையும் கொண்டிருப்பார், தனது நிதானமான செய்கையினாலும், பெரியோர்களின் ஆசிர்வாதமும் பாராட்டுகளையும் பெறுவார், இதில் கவனிக்க தக்க விஷயம் எதுவெனில் ஜாதகியின் களத்திர ஸ்தானம் கால புருஷ தத்துவத்திற்கு 10ம் வீடாகி ஜீவன ஸ்தானமான வருவது ஜாதகியை திருமணம் செய்துகொள்ளும் அன்பருக்கு! அளவில்லா ( சரம் ) தொழில் விருத்தியை வாரி வழங்கும், இதுவரை ஜீவனத்திர்க்கே சிரம பட்ட நபராக இருந்தாலும் சரி, இந்த வதுவை திருமணம் செய்த சில நாட்களிலேயே தொழில் ரீதியான அபிவிருத்தியை எதிர்பாரா வண்ணம் பெறுவார், அவரின் கௌரவமும் அந்தஸ்தும் சமுதாயத்தில் மேலோங்கும்.

மேற்கண்ட இருவரின் சுய ஜாதக ரீதியாக நடைபெறும் சுக்கிரன் திசை வரனின் ஜாதகத்தில் 4ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும் வாரி வழங்குவது ஏக திசா சந்திப்பால் எவ்வித துன்பமும் நடைபெற வாய்ப்பில்லை, மேலும் இவர்கள் திருமணம் செய்துகொள்வதால் திருமண வாழ்க்கையில் சிறப்பான முன்னேற்றங்களை வாரி வழங்கும் என்பது உறுதி, எனவே திருமண வாழ்க்கை மிகவும்  சிறப்பாக நடைபெற்று தம்பதியர் யோக வாழ்க்கையையே பெற்றார்கள் என்பது உறுதி செய்யபட்ட விஷயமாக இருக்கிறது அன்பர்களே !

இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை யோக பலன்களையே வழங்குவதால், ஏக திசை சந்திப்பு எப்படி தீமையை செய்யும் என்று ஜோதிடர்கள் நிர்ணயம் செய்தனர் என்பது எமக்கு புரியவில்லை, ஆக வதுவின் ஜாதகத்திலும், வரனின் ஜாதகத்திலும் நடைபெறும் சுக்கிரன் திசை எந்த பாவக பலனை தருகிறது என்று தெரியாத பொழுதே ஜோதிடர்களுக்கு இந்த குழப்பம் ஏற்ப்பட்டு இருக்கும், இருவருக்கும் நடைபெறும் சுக்கிரன் திசை வரனின் ஜாதகத்தில் 4ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களையும், வதுவின் ஜாதகத்தில் 7ம் பாவக வழியில் இருந்து யோக பலன்களை, தருகிறது என்று தெரிந்து இருந்தால் இவர்கள் ஜாதக பொருத்தம் இல்லை என்று ஏக திசை சந்திப்பை காரணம் காட்டி இருக்க வாய்ப்பில்லை அன்பர்களே ! இந்த மாதிரி குத்து மதிப்பாக தவறாக ஜாதக பலன் சொன்னால், இதற்க்கு உண்டான வினை பதிவு, ஜோதிடர்களின் சந்ததியை பாதிக்கும் என்பதும் ஜோதிடர்களையும் பாதிக்கும் என்பதும் ஏன் இவர்களுக்கு புரியாமல் போய்விடுகிறது, நாம் காணும் ஜாதக கணிதம் குறைந்த பட்சம் நம்மை நம்பி வருபவர்களுக்கு நன்மை செய்யாவிட்டலும் பரவாயில்லை, தீமை நடைபெறாமல் இருப்பது முக்கியமல்லவா அன்பர்களே !

பொதுவாக திருமண பொருத்தம் காண்பதில் வது வரன் ஜாதகத்தில் அடிப்படையாக கவனிக்கப்பட வேண்டிய விஷயமாக இருப்பது குடும்ப ஸ்தானம் எனும் 2ம் பாவகமும், களத்திர ஸ்தானம் எனும் 7ம் பாவகமுமே, இந்த இரண்டு பாவகமும் மிக வலிமையாக இருந்து நடைபெறும் திசை, எதிர்வரும் திசைகள் வலிமை பெற்ற பாவகங்களின் பலனை ஏற்று நடத்தினால் நிச்சயம் திருமண வாழ்க்கை மிகவும் சிறப்பாகவே அமையும், இத்துடன் 5ம் பாவகமும் இருவரின் ஜாதகத்தில் வலிமை பெற்று அமையும் பொழுது, நிச்சயம் சிறந்த புத்திர பாக்கிய யோகத்தை வாரி வழங்கிவிடும்.

பொருத்தம் இல்லை என்பதற்கு ஜோதிடர்கள் சொன்ன மற்றொரு காரணாம், " 5ல் ராகு புத்திர பாக்கியம் இல்லை " ஒருவரது ஜாதகத்தில் ராகு நல்ல நிலையில் இருக்கிறாரா?  பாதிக்கபட்டு இருக்கிறாரா ? என்று ஆய்வு செயாமல், ராகு 5ல் அமர்ந்தால் புத்திர பாக்கியம் இல்லை என்று முடிவு செய்வது உண்மைக்கு புறம்பான ஒரு விஷயம் அல்லவா ? பொதுவாக ராகு 5ல் அமர்ந்து அந்த பாவகத்திர்க்கு அதிபதி சுக்கிரன்,குரு,வளர்பிறை சந்திரன், சூரியனுடன் சேராத புதன் ( சூரியனுக்கு 14 பாகைக்கு மேல் அமர்ந்த நிலை) ஆகியோர் பொறுப் ஏற்றால் புத்திர ஸ்தானமான 5ம் பாவகம் 100% வலிமை பெற்று விடும் ஜாதகருக்கு பிறக்கும் குழந்தைகள் யாவும் ஆண் குழந்தைகளாகவே இருக்கும், ( ஜாதகர் தனது பூர்வீகத்தில் ஜீவனம் செய்து வந்தால் ) ஆக மேற்கண்ட வரனின் ஜாதகத்தில் சுக்கிரன் வீடான ரிஷபத்தில் அமரும் ராகு பகவான் ஜாதகருக்கு சிறந்த ஆண்வாரிசை வழங்குகிறார் என்பது உறுதியாகிறது, ஜாதகத்தில் உண்மையான விஷயங்கள் இப்படி இருக்க, இப்படி உண்மைக்கு புறம்பான ஜாதக பலன்களை சொல்லும் ஜோதிடர்களை என்ன செய்வது ? நாம் தான் தலையில் அடித்துக்கொள்ளவேண்டும்.

மேற்கண்ட சரியான உண்மையான விளக்கத்தை இரு தரப்பிற்கும் தெளிவாக சொன்ன பின்னரே இருவருக்கும் திருமணம் செய்து வைத்தனர், தற்பொழுது தம்பதியருக்கு சந்தான பாக்கியம் கிட்டியாதாக நம்முடன் மகிழ்ச்சியை பகிர்ந்துகொண்டனர், வாழையடி வாழையாக அவர்களது குடும்பம் 16 வகை செல்வமும் பெற்று செழித்து ஓங்கட்டும், இந்த பெருமை எல்லாம் எனது குருவையே சாரும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக