புதன், 20 ஏப்ரல், 2016

சித்திரை,ஆடி மாதத்தில் குழந்தை பிறந்தால் குடும்பத்திற்கு தீங்கு ஏற்ப்படுமா ?


இயற்கையாகவே இந்தியா வெப்பம் மிகுந்த நாடு, தமிழகத்தின் நிலை சொல்லி தெரிய வேண்டியது இல்லை, மேலும் கோடை காலமான பங்குனி,சித்திரை,வைகாசி மாதங்களில் வெப்பத்தின் தாக்கம் மிக கடுமையானதாக இருக்கும், குறிப்பாக சித்திரை மாதத்தில் சூரியனின் வெப்பம் தகிக்கும், இந்த காலங்களில் குழந்தை பிறப்பு அமைந்தால், தாயுக்கும் சேயுக்கும் சிறு சிறு உடல் நல குறைவு ஏற்பட கூடும் என்ற காரணத்தினால் சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பை நமது முன்னோர்கள் தவிர்த்தனர், இதுவே உண்மையான காரணமாக இருக்ககூடும் அன்பர்களே ! 

மாறாக சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகளால், குடும்பத்திற்கு ஆகாது, பெற்றோருக்கும், உறவினர்களுக்கும் ஆகாது என்பதெல்லாம் முற்றிலும் மூட நம்பிக்கையே அன்றி, சிறிதும் உண்மையில்லை என்பதை அனைவரும் உணர்வது அவசியமாகிறது, இந்த நவீன உலகில் இயற்க்கை வெப்பத்தின் கொடுமையில் இருந்து நம்மை காத்துக்கொள்ள, பல கருவிகள் வந்துவிட்டது, குளிர்ஊட்டி, மின் விசிறி என அதிநவீன கருவிகள் உள்ளது, எனவே சித்திரை மாதத்தில் பிறக்கும் குழந்தைகள் உடல் நலம் மற்றும் தாயின் உடல் நலம் காக்க வழியுண்டு, சித்திரை ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற கருத்தில் உண்மை இல்லை என்பதை "ஜோதிடதீபம்" கிழ்கண்ட உதாரண ஜாதகம் கொண்டு உறுதியாக பதிவு செய்கிறது, மேலும் கண்ணில் தெரியும் கடவுளான சூரியபகவான் உச்ச நிலையை பெரும் மாதம் சித்திரை மாதம் ஆகும், இந்த சித்திரையில் பிறக்கும் குழந்தைகள் இயற்கையாகவே ஆதிக்க சக்தி மிகுந்ததாகவும், அதிகாரம் செய்யும் யோகம் கொண்டதாகவும், தேசஸ் மிகுந்து உடல் வலிமை பெற்றதாகவும் திகழும், சந்திரன் ஆட்சி பெரும் மாதம் ஆடி மாதமாகும், இந்த மாதத்தில் பிறந்த குழந்தைகள் அதிர்ஷ்டம் மிகுந்ததாகவும், குறுகிய காலத்தில் மிகப்பெரிய பதவிகளையும், அந்தஸ்தையும் அடையும் என்பதால, மற்ற குழந்தைகளில் இருந்து சிறு வயது முதல் வித்தியாசமான நடவடிக்கைகளை சித்திரை மற்றும் ஆடி மாதங்களில் பிறக்கும் குழந்தைகள் கொண்டிருக்கும் என்பதே உண்மை, இதை அறிந்தவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திகொண்டனர், அறியாதோர் மேற்கண்ட மூட நம்பிக்கைகளில் மூழ்கி முத்து எடுத்துகொண்டு இருக்கின்றனர் .

ஒருவரது சுய ஜாதகத்தில் சூரியன் வலிமை பெற்று இருப்பதும், சந்திரன் வலிமை பெற்று இருப்பதும் சம்பந்த பட்ட ஜாதகருக்கு மிகுந்த யோக பலன்களை வாரி வழங்கும், குறிப்பாக ஜாதகர் பிறப்பில் ஏழ்மை நிலையில் இருந்தாலும் ஜாதகர் வளர வளர, வாழ்க்கையில் சகல யோகங்களையும் தங்கு தடையின்றி அனுபவிக்கும் நிலையை தரும், ( சித்திரை மாதத்திலும், ஆடி மாதத்திலும் பிறந்த பல அன்பர்கள் அரசு பதவிகளிலும், அதிகார பதவிகளிலும் சிறப்பாக செயல்பட்டு கொண்டு இருப்பது கவனிக்கத்தக்கது )  ஜாதகருக்கு சிறப்பான உடல் மற்றும் மன நிலையை தரும், எண்ணமும் அறிவு திறனும் சிறப்பாக செயல்படும், ஜாதகரின் லட்சியங்கள் யாவும் வெற்றி பெரும், நினைத்ததை சாதிக்கும் வல்லமையை தரும், மிகப்பெரிய அரசு அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், தொழில் அதிபர்கள், மற்றும் மக்கள் செல்வாக்கினை பெற்ற மனிதர்கள் அனைவரின் சுய ஜாதகத்திலும், வலிமை பெற்ற சூரியன் அல்லது சந்திரன் 12 பாவக வழியில் இருந்து சிறப்பான நன்மைகளை வாரி வழங்கிக்கொண்டு இருப்பார்கள் என்பதை கவனத்தில் கொள்வது அவசியமாகிறது.

ஒருவரது வாழ்க்கையை நிர்ணயம் செய்வது, பிறந்த மாதமோ, நட்சத்திரமோ, ராசியோ, கிழமையோ நிர்ணயம் செய்வதில்லை, ஜாதகரின் பிறந்த  நேரமும் அதன் அடிப்படையில் அமைந்த லக்கினமும், 12 பாவகங்களின் வலிமை நிலையும், வலிமை பெற்ற 12 பாவகங்களின் பலன்களை, நவகிரகங்கள் தமது திசா புத்திகளில் ஏற்று நடத்தும் பலாபலன்கள் அடிப்படையிலேயே ஒருவரது வாழ்க்கை யோக பலன்களையும், அவயோக பலன்களையும் தருகிறது, மேலும் சுய ஜாதகத்தில் ஓரிரு வினாடிகள் கூட மிகப்பெரிய பாவக வலிமை வித்தியாசங்களை தரக்கூடும், எனவே பிறந்த நேரம் என்பதே சுய ஜாதகத்தை நிர்ணயம் செய்யும் என்பதால், சித்திரை மாதத்தில் குழந்தை பிறப்பது தீமையை தரும் என்ற மூட நம்பிக்கையை களைவதே சால சிறந்தது.

சித்திரை மாதம் பிறந்த ராஜயோக ஜாதகத்தை இன்றைய சிந்தனைக்கு எடுத்துகொள்வோம் அன்பர்களே !



லக்கினம் : மீனம் 
ராசி : துலாம் 
நட்சத்திரம் : விசாகம் 2ம் பாதம் 

சித்திரை மாதத்தில் பிறந்த இந்த ஜாதகருக்கு லக்கினம் முதல் 12 பாவகங்களும் மிகவும் வலிமையான நிலையில் அமைந்திருக்கின்றது, ஜாதகர் பிறந்ததில் இருந்தே இவரது குடும்பம் நல்ல முன்னேற்றங்களையும், பொருளாதார வளர்ச்சியையும் தொடர்ந்து பெற்று கொண்டுதான் இருக்கின்றது, நல்ல உடல் நிலை, சிறந்த மன நிலை, தெளிவான அறிவு திறன், கௌரவம் குறையாத யோக வாழ்க்கை என ஜாதகர் இதுவரை யோக  பலன்களையே அனுபவித்து கொண்டு இருக்கின்றார்.

சுய ஜாதக வலிமை அடிப்படையில் ஜாதகருக்கு நல்ல வளரும் சூழ்நிலையை தந்தது, பால்ய வயதில் அடிப்படை கல்வி சிறப்பாக கற்றார், இளமையில் சிறப்பாக பட்டய கல்வியில் முதன்மையில் தேர்ச்சி பெற்றார், அரசு துறையில் பணியாற்றும் யோகத்தை பெற்றார், சரியான வயதில் திருமணம் அமைந்து நல்ல வாரிசும் அமைந்தது, பதவி உயர்வு ஜாதகரை தேடி வந்தது, சுயமாக தொழில் ஒன்றை கூட்டு முறையில் அமைத்துக்கொண்டு அதில் வெற்றியும் பெற்றார், அனைத்து வசதி வாய்ப்புகளையும் அனுபவிக்கும் யோகம் ஜாதகருக்கு கிடைத்துள்ளது கவனிக்க தக்க அம்சமாகும், சுய ஜாதகத்தில்  இதற்க்கு முன் நடைபெற்ற சனி திசை ஜாதகருக்கு பூர்வபுண்ணிய ஸ்தானமான 5ம் வீடு வாக்கு குடும்பம் எனும் 2ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோக பலனை வாரி வழங்கி உள்ளது, 2ம் பாவகம் ஜாதகருக்கு சர நெருப்பு ராசியான மேஷத்தில் அமைவது, ஜாதகரின் வெற்றிகளை 100% விகிதம் உறுதிபடுத்தியது.

 தற்பொழுது நடைபெறும் புதன் திசை ஜாதகருக்கு 7ம் வீடு அதிர்ஷ்டம் மற்றும் லாபத்தை தரும் 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெற்று யோகபலன்களை வழங்குவது, ஜாதகருக்கு புதன் திசையும் அதிர்ஷ்டங்களையும் லாபங்களையும் தொடர்ந்து வாரி வழங்கிக்கொண்டு இருக்கின்றது, எனவே சுய ஜாதக பாவக வலிமையே ஜாதகருக்கு யோக, அவயோக பலன்களை   வழங்குகிறது, பிறந்த மாதங்களோ, பிறந்த நாட்களோ, ஜென்ம நட்சத்திரமோ, ஜென்ம ராசியோ அல்ல என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, எனவே சித்திரை மாதம் ஆடி மாதம்  பிறக்கும் குழந்தைகள், குடும்பத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்ற மூட நம்பிக்கையை களைவது அனைவருக்கும் நன்மை பயக்கும்.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக