சனி, 4 மார்ச், 2017

பாதக ஸ்தானம், பாதக ஸ்தான அதிபதி தனது திசையில் தரும் பலன்கள் !


 சர லக்கினத்திற்கு 11ம் வீடு பாதக ஸ்தானமாகவும், ஸ்திர லக்கினத்திற்கு 9ம் வீடு பாதக ஸ்தானமாகவும், உபய லக்கினத்திற்கு 7ம் வீடு பாதக ஸ்தானமாகவும் இறைநிலை நிர்ணயம் செய்து உள்ளது, ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசை நடைமுறைக்கு வரும் பொழுது, இன்னல்களை மட்டுமே தரும் என்று கருதுவது, முற்றிலும் ஜோதிட கணிதத்திற்கு புறம்பானதாகவே "ஜோதிடதீபம்" கருதுகிறது, மேலும் நடைபெறும் பாதக ஸ்தான அதிபதி திசை, சுய ஜாதகத்தில் எந்த பாவக பலனை ஏற்று நடத்துகிறார் என்ற அடிப்படை விஷயமே அறியாமல், பாதக ஸ்தான அதிபதி திசை என்பதால் இன்னல்களை மட்டுமே தருவார் என்று கற்பனை செய்துகொண்டு ஜாதகபலன் காண முற்படுவதாகவே தோன்றுகிறது, இதைப்பற்றி இன்றைய பதிவில் சற்று சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !

அடிப்படையில் நாம் ஒரு விஷயத்தில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தானத்திற்கு அதிபதியாக வரும் கிரகம் தனது திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சம காலங்களில் பாதக ஸ்தான அதிபதி என்ற ஒரே காரணத்திற்க்காக இன்னல்களை தரும் என்று கருதுவது மிக மிக தவறான அணுகுமுறை ( ஒரு வேலை பாதக ஸ்தான அதிபதியின் திசை,  பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகருக்கு கடுமையான இன்னல்கள்  நடைமுறைக்கு வரும்)  , ஏனெனில் சுய ஜாதகத்தில் லக்கினம் முதல் பனிரெண்டு பாவகங்களின் வலிமையையே தனது திசா புத்தி காலங்களில் நவகிரகங்கள் ஏற்று நடத்தும், எனவே ஒருவரது ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசை,புத்தி சுய ஜாதகத்தில் எந்த பாவகத்தின் பலனை ஏற்று நடத்துகிறது என்பதில் தெளிவும், அப்படி ஏற்று நடத்தும் பாவகத்தின் வலிமையையும் கருத்தில் கொண்டே பலன் காண முற்பட வேண்டும், குத்துமதிப்பாக பாதக ஸ்தான அதிபதி திசை என்பதால் அவர் இன்னல்கள்தான் தருவார் என்று கருதுவது "குண்டு சட்டியில் குதிரை ஓட்டுவதற்கு " பொருத்தமானதாக மாறிவிடும்.

ஒருவரது சுய ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதியின் திசை வலிமை பெற்ற பாவக பலனை ஏற்று நடத்தினால், சம்பந்தப்பட்ட ஜாதகருக்கு பாதக ஸ்தான அதிபதியின் திசை நடைபெற்றாலும் சுபயோக பலாபலன்கள் நடைமுறைக்கு வரும், ஒருவேளை பாதிக்கப்பட்ட பாவக பலனை ஏற்று நடத்தினால் மட்டுமே ஜாதகர் சம்பந்தப்பட்ட பாவக வழியில் இருந்து இன்னல்களை சந்திக்க நேரும், மேலும் சுய ஜாதகத்தில் யோகாதிபதியின் திசை நடைபெறும் பொழுது, அந்த திசை பாதிக்கப்பட்ட பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தினால் யோகாதிபதியின் திசை என்ற போதிலும் சம்பந்தப்பட்ட ஜாதகர் பாதக ஸ்தான பலாபலன்களையே அனுபவிக்கும் சூழ்நிலையை தரும், தொடர்பு பெரும் பாதக ஸ்தான வழியில் இருந்து, யோகாதிபதி திசையிலும் ஜாதகர் கடுமையான இன்னல்களை சந்திக்க நேரும்.

இதை உதாரண ஜாதகம் கொண்டு தெளிவு பெறுவோம்:


லக்கினம் : துலாம் 
ராசி : துலாம் 
நட்ஷத்திரம் : ஸ்வாதி 1ம் பாதம்

மேற்கண்ட ஜாதகத்தில் பாதக ஸ்தானம் : சிம்மம் 
மேற்கண்ட ஜாதகத்தில் பாதக ஸ்தான அதிபதி : சூரியன் 
( உண்மையில் மேற்கண்ட ஜாதகத்திற்கு பாதக ஸ்தான அதிபதி வேறு என்பது நன்கு ஜோதிடத்தில் புலமை உள்ளவருக்கு தெளிவாக  தெரியும் )

பாதக ஸ்தான அதிபதியான சூரியன் தனது திசையில் ஏற்று நடத்தும் பாவக தொடர்புகள் அயன சயன ஸ்தானமான 12ம் வீடு பாக்கிய ஸ்தானமான 9ம் பாவக பலனை ஏற்று நடத்துவது ஜாதகருக்கு வெளிநாடுகளில் யோக வாழ்க்கை, பயணம் மூலம் நல்ல லாபங்கள், உல்லாசம், சுக போகம், தொழில் மற்றும் இடமாற்றத்தில் விருப்பம், தெய்வீக அனுபவம் என்ற வகையில் சுபயோகங்களை நல்குகிறது.

எனவே சூரியன் பாதக ஸ்தான அதிபதி என்ற போதிலும், தனது திசாபுத்திக்காலத்தில்  வலிமை பெற்ற அயன சயன ஸ்தான பலனை ஏற்று நடத்தி ஜாதகருக்கு சுப யோகங்களை வாரி வழங்குகிறார்.

ஜாதகரின் பாதக ஸ்தானம் 11ம் வீடாகிய சிம்மம், எனவே ஜாதகருக்கு பாதக ஸ்தானத்துடன்  தொடர்பு பெரும் பாவகங்கள் எவை எவை? பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்தும் நவக்கிரகத்தின் திசைபுத்தி எது? என்பதில் தெளிவு பெறுவது அவசியமாகிறது, இதை கருத்தில் கொண்டு பார்க்கும் பொழுது மேற்கண்ட ஜாதகருக்கு....

1,3,5,11ம் வீடுகள் பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுகின்றது .

நவகிரகங்களில் ( குரு ) திசை,புத்தி,அந்தரம் மற்றும் சூட்சமம் மட்டுமே பாதக ஸ்தான பலனை ஏற்று நடத்துகிறது, தற்போழுது நடைபெறுவது குரு திசை என்பதால் ( 03/09/2013 முதல் 03/09/2029 வரை ) ஜாதகர் லக்கின பாவக வழியில் இருந்து, வளரும் சூழ்நிலையில் இன்னல்கள் , முரட்டு சுபாவம், அசட்டை தனம், அறிவுபூர்வமற்ற செய்கைகள் மூலம் தானே தன்னை கெடுத்து கொள்ளுதல், தன்னம்பிக்கை அற்ற மனநிலை, பிற்போக்குத்தனமான எண்ணங்கள் என ஜாதகர் பாதக ஸ்தான வழியில் இருந்து கடுமையான இன்னல்களை அனுபவித்து கொண்டுள்ளார் , மேலும் பாதக ஸ்தான வழியில் இருந்து ஜாதகர் 200% விகித இன்னல்களை அனுபவிக்கும் சூழ்நிலையில் இருக்கின்றார் என்பதே உண்மை நிலை, இதை கருத்தில் கொள்வது பாதக ஸ்தானம் தரும் இன்னல்கள் பற்றி தெளிவு பெற உதவும்.

பாதக ஸ்தான அதிபதியின் திசை இன்னல்களை தரும் என்று கருதுவது அடிப்படை ஆதாரம் அற்ற விஷயமாகவே  "ஜோதிடதீபம்" கருதுகிறது எனவே சுய ஜாதக வலிமை உணர்ந்து ஜாதக பலன்காண முற்படுவதே மிக சரியானதாக அமையும்.

குறிப்பு :

நடைபெறுவது பாதக ஸ்தான அதிபதியின் திசை என்றாலும், அவர் ஏற்று நடத்துவது வலிமை பெற்ற பாவகம் எனில், சம்பந்தப்பட்ட ஜாதகர் வலிமை பெற்ற பாவக வழியில் இருந்து பாதக ஸ்தான அதிபதியின் திசையில் சுபயோகங்களையே அனுபவிப்பர், இதில் ஏதும் மாற்று கருத்து இல்லை அன்பர்களே.

வாழ்க வளமுடன் 
ஜோதிடன் வர்ஷன் 
9443355696

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக