வெள்ளி, 11 ஆகஸ்ட், 2017

ஜாதகத்தில் உள்ள யோகங்களும், யோகங்களை வழங்கும் திசா புத்திகளும், தொடர்ச்சி....



கடந்த பதிவில் உதாரண ஜாதகத்தில் உள்ள வலிமை பெற்ற பாவக நிலையை ( யோக நிலை ) பற்றி சிந்தனைக்கு எடுத்துகொண்டோம், அதில் 1,3,4,5,6,7,9,10ஆகிய 8 பாவகங்களும் மிகவும் வலிமையுடன் இருப்பதை கண்டோம், குறிப்பாக பாக்கிய ஸ்தானத்துடன் சம்பந்தம் பெரும் வீடுகள் வழியில் இருந்து ஜாதகர் அனுபவிக்கும் யோக பலன்களை பற்றி தெளிவு பெற்றோம், இனி சம்பந்தப்பட்ட ஜாதகர் தமது சுய ஜாதகத்தில் பாதிக்கப்பட்ட பாவக வழியிலான தொடர்புகளை சிந்தனைக்கு எடுத்துக்கொள்வோம் அன்பர்களே !


லக்கினம் : கடகம்
ராசி : ரிஷபம்
நட்ஷத்திரம் : கிருத்திகை 2ம் பாதம்

ஜாதகருக்கு பாதிக்கப்பட்ட பாவக தொடர்புகள் :

2,12ம்  வீடுகள் விரைய ஸ்தானமான 12ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு 2ம் பாவக வழியில் இருந்து வருமானம் சார்ந்த இன்னல்களையும் இழப்புகளையும் தரக்கூடும், 12ம் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு வீர்ய ஸ்தானமாக அமைவது ஜாதகரின் சில முயற்சிகள் தடைபெறக்கூடும், தாமதம் மற்றும் தடங்கல் மூலம் ஜாதகர் சில நேரங்களில் அதிக மன உளைச்சல்களை சந்திக்கும் நிலை ஏற்படலாம், 2ம் வீட்டிற்கு 12ம் பாவகம் 11ம் வீடாக அமைவது ஒரு வகையில் ஜாதகருக்கு சரளமான பேச்சு திறனையும், மிதம்மிஞ்சிய வருமானத்தையும் தரக்கூடும், இருப்பினும் ஜாதகருக்கு வரும் வருமானம் அனைத்ததையும் ஜாதகர் பயன் படுத்த இயலாத சூழ்நிலையை தரக்கூடும், வாக்கு பலிதம் உண்டாகும், வாக்கு வன்மையின் மூலம் வாழ்க்கையில் சுபயோகங்களை பெறுவதற்கு உண்டான சந்தர்ப்பங்கள் அதிகரிக்கும்.

12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் அதிக அளவிலான மன அழுத்தம் மற்றும் மன போராட்டங்களை சந்திக்கும் சூழ்நிலை தரும், குறிப்பாக ஜாதகர் செய்யும் பெரிய முதலீடுகள் ஜாதகருக்கு கடுமையான நெருக்கடிகளை தரும், நல்ல உறக்கம் பாதிக்கும், விபத்து நஷ்டம் மற்றும் மருத்துவ செலவினங்களை ஜாதகரால் தவிர்க்க இயலாது, மனோபயம் ஜாதகரின் முன்னேற்றத்தையும், மன தைரியத்தையும் பதம் பார்க்கும், பதட்டமான நேரங்களில் ஜாதகர் எடுக்கும் முடிவுகள் ஜாதகரின் பொருளாதார இன்னல்களை தரக்கூடும், திருப்தி இல்லாத மன நிலை ஜாதகரின் வாழ்க்கையில் ஓர் வெற்றிடத்தை எப்பொழுதுமே வைத்திருக்கும், மோட்ச வாழ்க்கைக்கு உண்டான தடைகளையும் தாமதங்களையும் தரக்கூடும்.

8ம் வீடு ஆயுள் ஸ்தானமான 8ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு பூர்ண ஆயுளை தரும், இருப்பினும் உடலில் ரண சிகிச்சையை தரக்கூடும், வலி தாங்கும் வல்லமையை ஜாதகர் பெற்றிருப்பர், தனது வாழ்க்கை துணை வழியிலான சில நன்மைகளை ஜாதகர் தன்னிறைவாக பெரும் யோகம் உண்டாகும், பாதுகாப்பான பயணம் ஜாதகரின் இன்னல்களை வெகுவாக  குறைக்கும்,  வெளியூர் வெளிநாடுகள் வழியில் இருந்து தன சேர்க்கை அதிக அளவில் உண்டாக வாய்ப்பு உள்ளது, ஜாதகரின் ஆயுள் பாவகம் கால புருஷ தத்துவ அமைப்பிற்கு 11ம் வீடாக அமைவது ஜாதகருக்கு வரும் இன்னல்களை ஜாதகரே தனது அறிவு திறனால் வெற்றி கொள்வார்  என்பதனை தெளிவுபடுத்துகிறது, பூர்ண ஆயுள் என்பதனால் ஜாதகர் உடல் நிலையில் மட்டும் சற்று கவனம் செலுத்துவது அவசியமாகிறது, பயணங்களிலும் பாதுகாப்புடன் இருப்பது வீண் விரையங்களை தவிர்க்க உதவும்.

11ம் வீடு பாதக ஸ்தானமான 11ம் பாவகத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகத்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட பாவகம் ஆகும், இதனால் ஜாதகரின் முன்னேற்றம்  பெரிய அளவில் பாதிக்கப்பட கூடும் முன்னேற்றம், ஜாதகருக்கு வரும் அதிர்ஷ்டங்கள் தடைபட கூடும், தன்னம்பிக்கை மற்றும் மனஉறுதி ஜாதகரின்  வாழ்க்கையில் சில நேரங்களில் பெரிய பாதிப்புகளை தருவதை தவிர்க்க இயலாது, சுய ஜாதகத்தில் எந்த ஓர் பாவகமும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெறுவது ஜாதகருக்கு உகந்தது அல்ல, மேலும் பாதக ஸ்தானத்துடன் சம்பந்தம் பெற்ற பாவக பலனை நடைபெறும், எதிர்வரும் திசா புத்திகள் ஏற்று நடத்தாமல் இருப்பது ஜாதகருக்கு சகல நிலைகளில் இருந்தும் நன்மைகளை தரும் அமைப்பாகும்.

மேற்கண்ட ஜாதகருக்கு வலிமை பெற்ற 1,3,4,5,6,7,9,10ம் பாவக வழியில் ஜாதகர் யோக பலன்களை அனுபவித்த போதிலும் 2,8,11,12ம் பாவக வழியில் இருந்து அவயோக பலன்களை எதிர்கொள்ளும் நிலையை தரும், எனவே ஜாதகர் 2,8,11,12ம் பாவக வழியிலான விஷயங்களில் அதிக கவனமுடன் இருப்பது அவசியமாகிறது, குறிப்பாக 2ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் தனக்கு வரும் வருமானங்களை பாதுகாக்கும் திட்டமிடுதல்களை செய்வது சிறப்பை தரும், அனைவரிடமும் பேச்சில் சமாதானத்தை கடைபிடிப்பது சுய முன்னேற்றத்தை அதிகரிக்கும், பொருளாதார திட்டமிடுதல்கள் ஜாதகரின் வாழ்க்கையில்  சுபயோகங்களை வாரி வழங்கும், 8ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் பாதுகாப்பான விஷயங்களில் அதிக கவனம் செலுத்துவது நல்லது, குறிப்பாக உடல் நிலை சார்ந்த விஷயங்களில் சற்று அதிக கவனம் வேண்டும், எதிர்பாராத நேரங்களில் வரும் இன்னல்களை தனது அறிவு திறன் கொண்டு வெற்றி பெறுவது அவசியமாகிறது, 11ம் பாவக வழியில் இருந்து அதீத தன்னம்பிக்கையும், முற்போக்கு சிந்தனையும் ஜாதகரின் வாழ்க்கையில் சகல சௌபாக்கியங்களையும் வாரி வழங்கும், தெய்வீக அனுக்கிரகம்  மூலம் வாழ்க்கையில் வெற்றி உண்டாகும், 12ம் பாவக வழியில் இருந்து ஜாதகர் செய்யும் முதலீடுகளில் அதிக கவனம் தேவை, திருப்தியான மனநிலை மற்றும் சரியான திட்டமிடுதல்கள் வெற்றி வாய்ப்பை அதிகரிக்கும், மற்றவர்கள் வழியில் இருந்து வரும் இன்னல்களை தவிர்க்க சற்று எச்சரிக்கை உணர்வுடன் செயல்படுவது ஜாதகருக்கு உகந்த சிறப்புகளை வாரி வழங்கும்.

வாழ்க வளமுடன்
ஜோதிடன் வர்ஷன்
9443355696  

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக